Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 1, 2022

பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரத்தை வலியுறுத்தி மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

கடந்த அ தி மு க ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2012ல் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஓவியம், உடற்கல்வி, தையல், இசை முதலான எட்டுத் துறைகளில் 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக ₹5000 ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் வாரம் மூன்று அரை நாட்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். மேமாதம் பணியும், ஊதியமும் கிடையாது. மேலும் மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல் எந்த சலுகையும் கிடையாது. நீண்ட இடைவெளிகளில் ₹ 7000,7700 என்ற சிறு ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டு, கடந்த வருடம் முதல் ₹10,000 மட்டுமே பெற்று வருகிறார்கள். இதிலும் வறுமை, மரணம், பணி பாதுகாப்பு இன்மை ஆகிய காரணங்களால் தற்போது 12,100 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

இவர்கள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பணி நிரந்தரம் கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். கடந்த ஆட்சியில் நிரந்தரம் செய்ய முடியாது என்று மறுத்து வந்தனர்.

இந்நிலையில், திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதி அளித்தது. மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்து வெற்றி பெறச் செய்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று 11 மாதங்களாகியும் ' நிதி நிலையை கருத்தில் கொண்டு படிப்படியாக நிறைவேற்றப்படும்' என்று மட்டுமே கூறி வருகிறது.

தற்பொழுதும் ஆளும் கட்சியை ஆதரித்து பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், இவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல் பணிக் குறிப்பேடு, கொடை ஊதியம், பணி மாறுதல், விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு, தேர்தல் பணி போன்ற அனைத்துச் சலுகைகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. 2022ல் மே மாதம் பள்ளி இருந்தும் ஊதியம் கிடையாது பணியும் கிடையாது என்று அறிவித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்திலும் இது பற்றி எதுவுமே கூறப்படாதது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் புறக்கணிப்பினால் அனைவரும் மிகுந்த மனநலப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, பகுதிநேர ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதார உரிமையை மீட்க வரும் 05.05.2022 வியாழன் டிபிஐ வளாகம் சென்னையில் தமிழகம் முழுவதிலுமிருந்து பெருந்திரளாகக் கூடி உச்சகட்டப் போராட்டமான மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையிலாவது தமிழக அரசு கவனத்துடன் பரிசீலித்து அறிவிப்பு வெளியிட்டு பணி நிரந்தரம் செய்யுமா? என்று மிகுந்த ஏக்கத்துடன் வறுமையில் வாடும் பகுதிநேர ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

விடியல் அரசினால் விடியுமா?பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்க்கை...

பொன். சங்கர்
செய்தித் தொடர்பாளர்,
திருப்பூர்.

1 comment:

  1. நிச்சயம் வெல்வோம் சார்

    ReplyDelete