JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, June 29, 2022

பிளஸ் 1 துணை தேர்வுக்கு இன்று விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட்டில் நடத்தப்பட உள்ளது. தேர்வில் பங்கேற்க, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில், பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. தேர்வில் 8.43 லட்சம் பேர் பங்கேற்றதில், 83 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை; 41 ஆயிரத்து 376 பேர் தேர்விற்கு வரவில்லை.

எனவே, 1.24 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறாத பட்டியலில் உள்ளனர்.அவர்களுக்கு, ஆகஸ்ட்டில் துணை தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க, இன்று முதல், வரும் 6ம் தேதிக்குள், தாங்கள் படிக்கும் பள்ளிகள் வழியே, மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.தனி தேர்வர்கள், அரசு தேர்வுகள் சேவை மையம் வழியே விண்ணப்பிக்க வேண்டும். சேவை மைய விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல்

பிளஸ் 1 தேர்வு எழுதியவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியலை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும், 1ம் தேதி பதிவிறக்கலாம். விடைத்தாள் மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள் நகல் பெறவும், நாளை முதல், 7ம் தேதி வரை, பள்ளிகள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.மறுமதிப்பீடு தேவைப்படுவோர், விடைத்தாளை ஆய்வு செய்தபின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

மறுகூட்டல் மட்டும் போதும் என்பவர்கள், மேற்கூறிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு, உயிரியல் பாடத்துக்கு 305 ரூபாயும்; மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் செலுத்த வேண்டும். விடைத்தாளின் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும், 275 ரூபாய் கட்டணத்தை பள்ளியிலேயே செலுத்த வேண்டும். விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யும் நாள் விபரம், பின்னர் தெரிவிக்கப்படும் என, தேர்வுத்துறை கூறியுள்ளது.

No comments:

Post a Comment