Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 2, 2022

TNPSC Group 4: குரூப் 4 தேர்வு கட் ஆப் மதிப்பெண் என்னவாக இருக்கும்?

குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது.
இந்த உத்தேச விடைகள் மூலம் தேர்வர்கள் தங்களை தாங்களாகவே மதிப்பீடு செய்து கொண்டு அடுத்தக்கட்ட நிலைக்கு தயாராகுவது நல்லது.

கடந்த 24ம் தேதி 7,031 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இந்த தேர்வை 21 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதியிருந்தனர். பல்வேறு தனியார் பயிற்சி நிறுவனங்கள், உத்தேச விடைகளை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ விடைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது .

தெரிவு முறை: குரூப் 4 ஒற்றை எழுத்துத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே தெரிவுமுறை நடைபெறுகிறது. அதாவது, முதன்மை தேர்வு, வாய்வழித் தேர்வு என எதுவுமின்றி தற்போது நடைபெற்ற எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடைப்படையிலும், வகுப்பு வாரி இட ஒதுக்கீடு அடிப்படையிலும் இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதனடிப்படையில், விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர்மரபினர், இசுலாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர் என வகுப்புப் பிரிவுகளுக்கு 69% இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணிநிபந்தனைகள்) 2016 சட்டப்பிரிவின் படி, நேரடி நியமனங்களில் பெண்களுக்கென 30% (Horizontal Reservation) விழுக்காடு ஒதுக்கப்படுகிறது. இதில், தகுதி வாய்ந்த ஆதரவற்ற விதவை பெண்களுக்காக 10% ஒதுக்கப்படுகிறது. மேலும், பெண் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் திருநங்கை விண்ணப்பதாரர்கள் இந்த ஒதுக்கீட்டின் கீழ் கருதப்படுவர்.

ஆண் -அல்லது - பெண் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் திருநங்கை விண்ணப்பதாரர்கள் பொதுப் பிரிவுக்கான 70% இடஒதுக்கீடு பிரிவின் கீழ் கருதப்படுவர். அதேபோன்று, மாற்றுத் திறனாளிகளுக்கென வகைப்படுத்தப்பட்ட 4% இடத்துக்கீடு குரூப் 4 பதவிகளுக்கு பொருந்தும்.

மதிப்பெண்கள்:

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு வினாத்தாள் சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருதுகின்றனர். மேலும், இரண்டாண்டுகளுக்குப் பிறகு குரூப் 4 தேர்வு நடைபெற்றதால், ஏற்கனவே இத்தேர்வுக்கு தயாராகி வந்திருந்த பழைய தேர்வர்கள் மிகத் துல்லியமான முறையில் பதில் அளித்திருப்பார்கள். எனவே, அடுத்தக் கட்ட அழைப்பதற்கான மதிப்பெண் சற்று அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

அதன்படி, ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகிய பிரிவினர் இளநிலை உதவியாளர் பதவிக்கு 170 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்திருந்தால் சான்றிதழ் சரிபாரிப்புக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 180க்கு மேற்பட்ட சரியான கேள்விகள் எடுத்த பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் நல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இசுலாமிய வகுப்பினர் 172 முதல் 175 வரை சரியான கேள்விகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் 5 மடங்கு விண்ணப்பத்தாரர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட இருக்கின்றனர். எனவே, டிஎன்பிஎஸ்சி வெளியிட்டஉத்தேச விடைகள் மூலம் தேர்வர்கள் தங்களை மதிப்பீடு செய்து கொண்டு உடனடியாக அடுத்தக்கட்ட நிலைக்கு தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment