சென்னை-''துணை மருத்துவ படிப்புகளுக்கான 'ஆன்லைன்' கவுன்சிலிங், 21ம் தேதி முதல் நடத்தப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், 2022 - 23ம் ஆண்டுக்கான துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:துணை மருத்துவ பட்டப்படிப்பு, மருந்தாளுனர், 'டிப்ளமா நர்சிங், டிப்ளமா ஆப்டோமெட்ரி, பாராமெடிக்கல் டிப்ளமா' சான்றிதழ் படிப்புகளுக்கு, 121 அரசு மருத்துவ கல்லுாரிகளில் 2,526 இடங்கள் உள்ளன.அதேபோல், 348 சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு 15 ஆயிரத்து 307 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு 2022 - 23ம் கல்வியாண்டிற்கு, 87 ஆயிரத்து 764 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்தனர். இதில், துணை மருத்துவ படிப்புகளுக்கு மட்டும், 58 ஆயிரத்து 980 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 58 ஆயிரத்து 141 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.மருந்தாளுனர் படிப்பு, 5,206; டிப்ளமா நர்சிங், 12 ஆயிரத்து 478; டிப்ளமா ஆப்டோமெட்ரி, 948; பாராமெடிக்கல் டிப்ளமோ சான்றிதழ் படிப்புக்கு 7,540 பேருக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் மாணவர் சேர்க்கை, வரும் 21ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடைபெறும். கவுன்சிலிங்கில் யார், யார் எந்தெந்த நேரத்தில் பங்கேற்க வேண்டும் என்பது குறித்து, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 8,225 இடங்கள் உள்ளன. அதில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, 455 இடங்கள் கிடைக்கும்.
அதேபோல், 2,160 பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்பு இடங்களில், 114 'சீட்' அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். நீட் தேர்வு பட்டியல் கிடைத்தவுடன், மாணவர் சேர்க்கை நடவடிக்கை துவங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனர் சம்சத் பேகம், மருத்துவ கல்வி தேர்வு குழு செயலர் முத்துச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment