Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, September 29, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.09.2022

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: கடவுள் வாழ்த்து
குறள் : 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொருள்:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

பழமொழி :

Do not count your chickens before they are hatched. 

மனக்கோட்டை கட்டாதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நான் வலது கையால் செய்யும் உதவி என் இடது கைக்கு கூட தெரிய கூடாது.

 2. பிறருக்கு தெரியும் படி செய்தால் அது உதவி அல்ல விளம்பரம். கடவுளுக்கு பிரியம் இருக்காது 

பொன்மொழி :

ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் உங்கள் லட்சியத்தை ஒரே ஒருமுறை நினைப்பதன் மூலம் அடைய முடியாது அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்.

பொது அறிவு :

1.ராணுவ தினம் எப்போது ?

 ஜனவரி 15 . 

 2. உலக எய்ட்ஸ் தினம் எந்த நாள் ? 

 டிசம்பர் 1

English words & meanings :

yawl - A ship's small boat, crewed by rowers. Noun. கப்பலில் உள்ள சிறிய படகு. பெயர்ச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அந்த வகையில் கொண்டைக்கடலையின் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு.

கொண்டைக்கடலையின் கிளைசெமிக் குறியீடு 28 மட்டுமே. அதனால் வறுத்த கொண்டைக்கடலை நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஸநாக்ஸாக இருக்கும்.

NMMS Q 70:

செப்டம்பர் 2018 சுனாமியால் மிகவும் பாதிப்படைந்த நாடு எது? 

விடை: இந்தோனேஷியா

செப்டம்பர் 29




செப்டம்பர் 29: உலக இதய தினம்

உடலின் சில உறுப்புகள் இல்லாமல் நாம் வாழ்ந்துவிடமுடியும். ஆனால், இதயம் இல்லாமல் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழ இதயமே இன்றியமையாதது. மனித உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் இதயம்தான் பாதுகாக்கிறது. நம்முடைய ஆரோக்கியமான வாழ்வுக்கு இதயத்தின் ஆரோக்கியமே அடிப்படை. இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

மனதை ஒருமுகப்படுத்தினால் வெற்றி

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும், பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்து கொண்டிருந்தன.

இளைஞர்கள் பாலத்தில் நின்று, ஓடை நீரில் அசைந்து கொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுட முடியவில்லையே! என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.

அவன் விவேகானந்தரிடம், பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பது போல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள் அப்போது உங்களுக்கே தெரியும்! என்று கூறினான். 

சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறி வைத்து சுட ஆரம்பித்தார். அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்து கொண்டிருந்தன. விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாகச் சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்துச் சிதறின. இதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். 

அவர்கள் விவேகானந்தரிடம், நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால் தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள், இல்லையா? என்று வினவினார்கள். அதற்கு விவேகானந்தர், என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை.

அவர்கள், அப்படியானால் ஒரு குறி கூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது? என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும் என்று பதிலளித்தார். 

மேலும் சுவாமி விவேகானந்தர் மன ஒருமைப்பாடு பற்றி இவ்விதம் கூறியிருக்கிறார் வெற்றியின் ரகசியம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. உயர்ந்த மனிதனையும், தாழ்ந்த மனிதனையும் ஒப்பிட்டுப் பார். இருவருக்கும் உள்ள வேறுபாடு, தங்கள் மனதை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கும்.மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளரவளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி.

இன்றைய செய்திகள்

29.09.22

* தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

* மோசடி பத்திர பதிவை ரத்து செய்யும் நடைமுறை - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

* பிஎச்டி மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை ஆய்விதழ்களில் பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று புதிய விதிமுறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு முடிவெடுத்துள்ளது.

* விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு போன்ற ‘விஞ்ஞான் ரத்னா’ என்ற புதிய விருதை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

* சிறைப்பிடிக்கும் வீரர்களை ரஷியா சித்திரவதை செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

* ரஷியாவில் கொரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி.

* தேசிய விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை அக்டோபர் 1-ந் தேதி வரை நீட்டித்து இருப்பதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

* சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை - இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் முன்னேற்றம்.

Today's Headlines

 * Minister M. Subramanian has said that dengue is under control in Tamil Nadu.

* Minister M. Subramanian released the rank list for Postgraduate Medical Degree, Postgraduate Diploma and Postgraduate Dentistry and National Board Degree Course.

 * The process of cancellation of fraudulent deed registration was initiated by Prime Minister M.K.Stalin.

 * The University Grants Committee has decided to implement a new regulation that says PhD students are not required to publish their research papers in journals.

 * The central government is planning to give a new award called 'Vignan Ratna', similar to the Nobel Prize, to scientists.

 * Ukraine accuses Russia of torturing captive soldiers.

* It has been reported that the corona infection has suddenly increased in Russia.

 * India 'A' team won the one day cricket match against New Zealand.

 * The Union Sports Ministry has announced that the application deadline for the National Sports Award has been extended till October 1.

*  International Badminton Rankings - Indian Player HS Pranai's Progress
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்


No comments:

Post a Comment