Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 14, 2022

மின் வாரிய கள உதவியாளர், 'ஒயர்மேன்' பணியிடம் நிரப்ப உத்தரவு

தமிழக மின் வாரியத்தில் காலியாக உள்ள கள உதவியாளர், 'ஒயர்மேன்' பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கும், மின் வாரியத்துக்கும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ல் பிறப்பித்த அறிவிப்பின்படி, மின் வாரியத்தில் கள உதவியாளர் பணியிடங்களுக்கு 900 பேர் நியமிக்கப்பட்டனர். தேர்வில் வெற்றி பெற்ற மற்றவர்களை நியமிக்கவில்லை. பின், 2020ல் 2,900 கள உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கொரோனாவால் நியமனம் நடக்கவில்லை. ஆனால், 'கேங்மேன்' பணியிடங்களுக்கு, 9,613 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து, கள உதவியாளர் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தாக்கல் செய்த மனுக்களில், 'ஏற்கனவே 900 பேர் கள உதவியாளராக நியமிக்கப்பட்டு விட்டனர். தேர்வான மீதி 2,270 பேரையும் நியமிக்க வேண்டும். போதிய கள உதவியாளர்கள் இல்லாததால், கேங்மேன்களை ஈடுபடுத்துகின்றனர். அதனால், 25 மின் விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன' என கூறப்பட்டது.

மின் வாரியம் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், 'கள உதவியாளர் பணியிடங்கள் 29 ஆயிரத்து 50 உள்ளன; 5,032 பேர் தற்போது பணியில் உள்ளனர். கேங்மேன் பணியில் 9,613 பணியிடங்கள் 2021ல் நிரப்பப்பட்டு விட்டன. கள உதவியாளர் பணியில், 8,000 காலியிடங்களை நிரப்ப, அரசிடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.

மனுக்களை விசாரித்த, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்த உத்தரவு:கடந்த ஆறு ஆண்டுகளாக, கள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அறிக்கையில் உள்ளபடி, 5,000 பேர் தான் அந்த பணியில் உள்ளனர். கள உதவியாளர் பணியிடங்களை நிரப்பாததால், ஓய்வுபெற்ற கேங்மேன்களை ஈடுபடுத்துகின்றனர். 8 கேங்மேன் பயிற்சியாளர்கள் மின்சாரம் தாக்கி பலியாகி இருப்பது துரதிருஷ்டவசமானது. 25 பேருக்கு மேல், மின் விபத்துக்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

களத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதால், குழி தோண்டவும், கம்பம் நிறுவவும், கம்பங்களில் ஏறவும் கேங்மேன்களை ஈடுபடுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அஜாக்கிரதையால், பெரும்பாலான நேரங்களில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. மின் பணிகளை கவனிக்கவே, கேங்மேன் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கள உதவியாளர் மற்றும் ஒயர்மேன் பிரிவில், 30 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாக, புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது.

கள உதவியாளர், ஒயர்மேன் பணிகளில் காலியிடங்களை நிரப்பாமல் இருப்பதால், மின் வாரிய பணிகளுக்கு மட்டுமின்றி, பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, முன்னுரிமை அடிப்படையில் காலியிடங்களை நிரப்ப, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனுதாரர்கள், பணி நியமன உரிமை கோர முடியாது. ஆட்கள் பற்றாக்குறை கருதி, ஏற்கனவே தேர்வில் கலந்து கொண்ட மனுதாரர்களை, விதிகள் அனுமதித்தால், இடைக்கால ஏற்பாடாக நியமிக்கலாம். எனவே, கள உதவியாளர், ஒயர்மேன் காலியிடங்களை விரைந்து நிரப்ப, அரசும், தேர்வாணையமும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.காலியிடங்களை நிரப்பும் வரை, தகுதியானவர்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்கலாம். கள உதவியாளர் பணிகளில், கேங்மேன்களை ஈடுபடுத்தக் கூடாது என, அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment