செங்கல்பட்டு: மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமானவரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகாலியிடங்களுக்கு கல்வித்தகுதி பட்டதாரி (ஏதாவது ஒரு பட்டம்) ஆகும். வயதுவரம்பு 1.1.2022 தேதியில் 18 முதல் 27 ஆகும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடங்கள் வயது வரம்பில் தளர்வும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
மொத்த பணிக்காலியிடங்கள் தோரயமாக 20,000 (இந்தியா முழுவதும்). இப்பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 8.10.2022. மேலும், விவரங்கள் அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பிக்க https://ssc.nic.in/என்ற இணைதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம். செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டும், 044-27426020 என்ற தொலைபேசி எண்ணில் 26.09.2022 தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி துவங்கும் தேதி ஒவ்வொருக்கும் கைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment