ஒரே மொழி பேசும் மக்கள் இரு மாநிலங்களில் இருப்பதால் அவர்களுக்கு அரசு பணியிடங்களில் இரு மாநிலங்களுக்கு இடையே பணியிட மாறுதல் தரும் திட்டம் தொடங்கபட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஆந்திராவை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் ஆந்திராவில் தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த பலர் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் பல ஆண்டுகளாக தங்களது சொந்த மாநிலத்தில் பணியாற்ற அனுமதிக்குமாறு இரு மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை கருத்தில் எடுத்துக்கொண்ட தெலுங்கானா அரசு இதுதொடர்பாக தங்களது கருத்தினை தெரிவிக்குமாறு ஆந்திர அரசுக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதியது. இதனையடுத்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் அதிகாரிகளுக்கு ஆந்திரா முதலமைச்சர் ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார். உடனே டிரான்ஸ்பர் கேட்பவர்கள் பற்றிய முழு விபரம் சேகரிக்கப்பட்டது.
அதில் ஆயிரத்து 338 ஊழியர்கள் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஆந்திர பிரதேசத்திற்கும், ஆயிரத்து 804 பேர் ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவிற்கு மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர் என்ற தகவல் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை முழுமையாக ஆய்வு செய்த அவர் பணியிட மாறுதல் வழங்க ஒப்புதல் வழங்கினார்.
எதிர்காலத்தில் இதுபோல் மாறுதல் கேட்டு விண்ணப்பிவர்கள் குறைந்தபட்சம் ஒரு மாநிலத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என இரு மாநில அரசுகளும் முடிவு செய்துள்ளன.
No comments:
Post a Comment