JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, September 26, 2022

'ஆசிரியருக்கு தண்டனையா?'- பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் மேல்நிலைப்பள்ளியில் 800க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த வாரம் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் சிகரெட் பிடித்து புகையை உடன் படிக்கும் மாணவியின் மீது ஊதியுள்ளார். இது அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு தெரியவர அந்த மாணவனை அழைத்து கண்டித்துள்ளனர்.

இதனை எதிர்த்து அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று மாணவனை கண்டித்த ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என முறையிட்டனர்.

இதனை அறிந்து பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் கண்டித்த ஆசிரியர்களில் இருவரை பணியிடை நீக்கம் செய்தும் இருவரை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஆரணி சேவூர் பள்ளியில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக பள்ளியில் பயிலும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு ஆதரவாக கிராமத்தில் உள்ள பொதுமக்களும் சாலை மறியலில் பங்கு கொண்டனர்.

காவல்துறையினர் வந்து பேச்சு வார்த்தை நடத்தியும் மாணவர்கள் கலையாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்கள் ஏந்தி இருந்த பதாகைகளில், 'சமத்துவம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் பாகுபாடு பார்ப்பார்களா? தவறு செய்த மாணவனுக்கு அறிவுறை வழங்கிய ஆசிரியருக்கு தண்டனையா?' போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

No comments:

Post a Comment