தமிழ்நாட்டில் 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் ( சென்னை நீங்கலாக ) மக்கள் தொகைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை தற்போது நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது. மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகளில் புதிய பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே உள்ள பணியிடங்களை முறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பணியாளர் பிரிவு, வருவாய் மற்றும் கணக்குப் பிரிவு, பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு ஆகிய 4 பிரிவுகளாக இயங்கி வரும் நிலையில் பணியிடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள தாம்பரம், கடலூர், காஞ்சிபுரம், ஒசூர், தஞ்சாவூர் ஆகிய மாநகராட்சிகளில் போதுமான பணியிடங்கள் இல்லை என புகார் வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் சேவையை மேம்படுத்துதல், வருவாயை பெருக்குதல், ஆகிய காரணங்களாக புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால், 20 மாநகராட்சிகளில் 3,417 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment