Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 6, 2022

தமிழகத்தில் 2,748 கிராம உதவியாளர் பணி

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தற்போது, பெரும்பாலான நேரடி நியமனங்கள் தமிழ்நாடு அரசுப் பணியமளர் தேர்வாணையத்தின் எல்லைக்குள் கொண்டு வரப்பட்டு வரும் சூழலில், கிராம உதவியாளர் போன்ற ஒரு சில அரசு பணிகள் மட்டுமே உள்ளூர் மட்ட அளவில் நிரப்பப்பட்டு வருகின்றன. பல்வேறு கால சூழல்களால், டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெறமுடியாமல், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்களுக்கு இந்த கிராம உதவியாளர் அறிவிப்பு நல்லதொரு வாய்ப்பாக கருதப்படுகிறது.

கிராம உதவியாளர் பணி என்றால் என்ன?

தமிழ்நாட்டின் வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கீழாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

வரி வசூலித்தல், கிராம கணக்குகளை நிர்வகித்தல், நில வருவாய் ஆவணங்களைத் தயாரித்தல், கணக்குகளை முறையாக சரியாக வைத்து கொள்ளுதல், பிறப்பு, இறப்பு போன்ற பல்வேறு பதிவேடுகளை தயாரித்தல் மற்றும் புதிப்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலும், கிராம் நிர்வாக அலுவலருக்கு உதவியாளர் போல் செயல்பட வேண்டும். இதற்கான கல்வித் தகுதி, வெறும் 5ம் வகுப்புத் தேர்ச்சி என்பதாலும், நிர்வாக அமைப்பில் மிகவும் கீழாக உள்ள பணி நியமனம் என்பதாலும் சில சங்கடங்களை தாங்கிக் கொள்ள வேண்டி வரும். இருந்தாலும், விளிம்பு நிலை மக்களின் அன்றாட பிரச்சனைகளை கண்காணித்து, மக்களோடு மக்களாய் பயணிப்பதற்கான நல்வாய்ப்பும் உருவாகும். இதை பணியில் இருந்து கொண்டே, நீங்கள் அடுத்தடுத்த அரசுப் பணிகளுக்கு முயற்சிக்கலாம் என்பது கூடுதல் தகவல் .

அடிப்படைத் தகுதிகள்: பெரும்பாலும் 5ம் வகுப்புத் தேர்ச்சிப் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்; காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட வருவாய் கிராமத்தையோ அல்லது அதனைச் சுற்றியுள்ள குக்கிராமத்தையே சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு செய்திருப்பது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்படலாம்.

தெரிவு முறை:

முன்னதாக, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், " இதற்கான எழுத்துத்திறன் தேர்வை கண்காணிக்க தாலுகா அளவில் துணை கலெக்டரை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். வாசிப்புத் திறனை அறிந்து கொள்வதற்காக எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.

உத்தேச தேதிகள்: 2,748 கிராம உதவியாளர் இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை நவம்பர் 14-ம் தேதி பரிசீலித்து, முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19-ம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும். மேலும், தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19-ம் தேதி வெளியிட்டு, அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment