Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, October 21, 2022

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் 4 சதவீதம் அதிகரிப்பு

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலை நிவாரண படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நலத்துறை தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசு பணியாளர்களின் அகவிலைப் படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரண (டிஆர்) உயர்வுக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசாக அவர்களுக்கான அகவிலை நிவாரணம் 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான டிஆர் 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதிகரிக்கப்பட்ட இந்த அகவிலை நிவாரணம் 2022 ஜூலை 1-லிருந்து கணக்கிட்டு வழங்கப்படும்.

இந்த அகவிலை நிவாரண உயர்வு குடும்ப ஓய்வூதியதாரர், ஓய்வுபெற்ற பொதுத் துறை பணியாளர்கள், தன்னாட்சி அமைப்புகள், ரயில்வே ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோருக்கும் பொருந்தும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

முன்னதாக, அகவிலைப் படி மற்றும் அகவிலை நிவாரணத்தை 3 சதவீதம் உயர்த்தி 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அதிகரிப்பதற்கு மத்திய அமைச்சரவை குழு கடந்த மார்ச் மாதத்தில் ஒப்புதல் அளித்தது. இது, 2022 ஜனவரி 1-லிருந்து அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அகவிலைப்படி தற்போது இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் டிஏ மற்றும் டிஆர், பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 தேதிகளில் மாற்றியமைக்கப்படுகிறது. 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த விதிமுறைகளின் அடிப்படையில் இந்த மாற்றத்தை மத்திய அரசு மேற்கொள்கிறது.

No comments:

Post a Comment