சமீபத்திய நாட்களில், தற்காலிக ஆசிரியர் பணியிட நியமனங்களில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரிந்து வரும் தன்னார்வலர்களுக்கு மாநில பள்ளிக்கல்வித் துறை முக்கியத்துவம் அளித்து வருகிறது.
முன்னதாக, 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,188 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 13,331 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதில், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்துவருபவர்களுக்கு இடைநிலை/ பட்டதாரி பணியிடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதே போன்று, ஊராட்சி, ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு 2381 தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனங்களிலும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பெரும்பாலும், இந்த தற்காலிக ஆசிரியர்கள் அதிகபட்சம் 10 அல்லது 11 மாதங்களுக்குத்தான் நியமிக்கப்பட உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், கடந்த காலங்களில் இதே போல் நியமிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகளாக பணியில் நீடித்து வருகின்றனர். தற்காலிக ஆசிரியர் பணி மூலம் கற்பித்தல் அனுபவங்களையும், பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்பு தனியார் பள்ளியில் நல்ல வேலைவாய்ப்பினையும் பெற முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.
கற்றல்/கற்பித்தல் என்பதைத் தாண்டி, மாறிவரும் கல்வித் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காவும், கல்வித் துறைக்குதேவையான திறமையான மனிதவளத்தை உருவாக்கும் திட்டமாகவும் இது மாறி வருகிரது.
எனவே, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக தொண்டு செய்வதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டம்:
கொரோனா பெருந்தொற்று பொது முடக்கத்தால் ஏற்பட்ட பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்கீழ், பள்ளி நேரங்களுக்குப் பிறகு, தினசரி 1 முதல் 1.30 மணி நேரம் வரை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு கற்றல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
மாநிலத்தின் கிட்டத்தட்ட 92 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகளில் உள்ள 34,05,856 அரசுப்பள்ளி மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் கற்றல் திறன்களைப் பெற்று வருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ், வாரத்திற்கு 6 மணி நேரம் கற்றல் அளிக்கும் முழு நேர ( Full time) தன்னார்வலராகவும், வாரத்திற்கு ஒருமுறை/இருவாரங்களுக்கு ஒருமுறை/மாதத்திற்கு ஒருமுறை கற்றல் அளிக்கும் பகுதி நேரத் தன்னார்வலராகவும் தொண்டு செய்யலாம். மேலும், நீங்கள் சொந்தக் காரணங்களுக்காக இல்லம் தேடிக் கல்வியில் இருந்து எளிமையான முறையில் விலகிக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
யாரெல்லாம் தகுதியானார்கள்?
மாணவர்/ அரசுப் பள்ளி மாணவர்/ தனியார் பணியாளர்கள்/சுய தொழில் முனைவோர்/ வேலை தேடுபவர்/ இல்லத்தரசி/ ஆசிரியர் சமூகம்/ ஓய்வு பெற்றோர் என பல்வேறு பிரிவுகளில் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
அடிப்படைத் தகுதிகள்:
கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்; தமிழ், ஆங்கிலம், கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்); யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்; குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்
விண்ணப்பம் பதிவு செய்வது எப்படி?
illamthedikalvi.tnschools.gov.in என்ற இணைய பக்கத்திற்கு செல்லவும்;
முகப்புப் பக்கத்தில், தன்னார்வலர்களுக்கான பதிவேற்று படிவத்தை (Volunteer Registration) கிளிக் செய்யவும்.
பதிவேற்றுப் படிவம், அடிப்படைத் தகவல்கள், கல்வி மற்றும் தொழில் விவரங்கள், முகவரி மற்றும் இதர விவரங்களை நிரப்பவும்.
அடிப்படைத் தகவல் பகுதியில் முழுப் பெயர், பாலினம், பிறந்த தேதி , அலைபேசி எண், வாட்ஸ்ஆப் எண், மின்னஞ்சல், ஆதார் எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். அதேநேரம், ஆதார் எண், மின்னஞ்சல் கட்டயாமில்லை.
நீங்கள் ஏன் தொண்டு செய்ய விரும்புகின்றீர்கள்? முந்தைய கற்பித்தல் அனுபவம்? தன்னார்வ அனுபவம் போன்ற கேள்விகளுக்கு 1000 எழுத்துக்களுக்கு மிகாமல் பதிவிடவும்.
No comments:
Post a Comment