மனிதவள மேலாண்மைத்துறை அமைத்த குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள அரசாணை 115-க்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தலைமை செயலகச்சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அவர்களிடம் அரசாணை 115-ஐ ரத்து செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், 5 பேர் கொண்ட குழுவின் ஆய்வு வரம்புகளை ரத்து செய்வதாகவும், புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனிதவள சீர்திருத்தக் குழு கடந்த மாதம் 18-ம் தேதி அரசாணை (நிலை) எண்.115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் முதலமைச்சரிடன் இன்ற மனுவாக அளித்ததையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர்களுடைய கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த முதலமைச்சர், எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழுவின் தற்போதைய ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு, புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.
No comments:
Post a Comment