Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 20, 2022

தமிழக ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு உயர்த்திய 4 சதவிகிதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும்: தலைமை செயலக சங்கம் கோரிக்கை

ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு உயர்த்தி வழங்கிய 4 சதவிகித அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு தலைமை செயலக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கலைஞர் முதல்வராக இருந்தபோதுதான், ஒன்றிய அரசு அகவிலைப்படியினை உயர்த்தும்போது, அதன் அடிப்படையிலேயே நிலுவை தொகையோடு மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கும் நடைமுறையை கொண்டு வந்தார். 

அதைப்போலவே, ஈட்டிய விடுப்பு கணக்கில் உள்ள விடுப்பினை சரண் செய்து ஊதியமாக பெறும் நடைமுறையும் கொண்டு வந்தவர் கலைஞர்தான். விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் அதனை சமாளிப்பதற்காக வழங்கப்படுவதுதான் அகவிலைப்படி உயர்வு.

இதனை புதிய சலுகை போல் சித்தரிப்பதும், காலந்தாழ்த்தி வழங்குவதும் நிலுவை தொகையினை மறுப்பதும் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் மத்தியில் கடுமையான மன வேதனையையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் காட்டிய வழியில் லட்சிய பாதையில் அயராது தமிழக மக்களின் நலனுக்காக உழைத்திடும் முதல்வர், ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கிய உயர்த்தப்பட்ட 4 சதவிகித அகவிலைப்படியினை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். அதேபோன்று, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை வழங்கிட வேண்டும். 

1.4.2003க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய ஆணைகளை உடனடியாக வெளியிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23, 24, 25 ஆகிய மூன்று நாட்கள் தலைமை செயலக பணியாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment