JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, December 22, 2022

10ம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.இ.இ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம்: பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 2020 - 21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.இ.இ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இந்திய தகவல்தொழில்நுட்ப கல்வி நிறுவனம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேருவதற்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்பதற்கும் தகுதி பெறுவதற்கான கூட்டு நுழைவுத் தேர்வு 2023ம் ஆண்டு நடத்தப்படவிருக்கிறது. இதற்காக நாடு முழுவதில் இருந்து 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது 10ம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் இரு ஆண்டுகளுக்கு முன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு மதிப்பெண் வழங்கப்படாததால் அவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, கொரோனா சூழலால் தமிழ்நாட்டு மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண்களை பூர்த்தி செய்யாமலேயே விண்ணப்பிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் 2020 - 21ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.இ.இ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகாமையிடம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கோரிக்கை விடுத்துள்ள நிலையில் பள்ளிக்கல்வி ஆணையர் இந்த அறிவிப்பை வெளிட்டுள்ளார். தேசிய தீர்வு முகமையும் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளதாக தெரிவித்த பள்ளிக்கல்வி ஆணையர், மாணவர்கள் பதற்றம் அடையாமல் ஜே.இ.இ. தேர்வுக்கு தங்களை தயார் செய்யலாம் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment