பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை ஆகிய பொருட்களுடன் ரூ.1000 பணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும்.
கடந்த முறை வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் வரும் 2023ம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கான பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அதன்படி, வருகிற 2023ம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பதினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்கு சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியினை வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார். அன்றைய தினமே மாவட்டங்களில் அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment