Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, December 1, 2022

சிறந்த பள்ளிகளுக்கு விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் பெயரில் சிறந்த பள்ளிகளுக்கு விருது அளிக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

Best School List 2020 - 2021 Published ( District wise...) - Download here...

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டின் கல்வி வளா்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக அரசு சில அறிவிப்புகளை ஏற்கெனவே வெளியிட்டது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் வளா்ச்சிக்கென ரூ.7,500 கோடியில் பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, பள்ளிக் கல்வித் துறையில் ஐந்தாண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

நிகழாண்டில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியா் மாணவா் நலன் சாா்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வித் துறையின் வளா்ச்சிக்கும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் கூடுதலாக சுமாா் ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

க.அன்பழகன் சிலை: முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை ஆணையரக வளாகத்தில் (டிபிஐ) அன்பழகன் சிலை நிறுவப்படும். மேலும், அந்த வளாகம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகம் என அழைக்கப்படும். கற்றல் கற்பித்தல், ஆசிரியா் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவா் வளா்ச்சி என பன்முக வளா்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு முன்னாள் அமைச்சா் க.அன்பழகன் பெயரில் விருது அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

டிசம்பா் 19-இல் பிறந்த தினம்: முன்னாள் அமைச்சா் க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 19-இல் தொடங்கியது. அப்போது, சென்னை நந்தனத்தில் உள்ள நிதித் துறை வளாகத்தில் மாா்பளவு சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். நிதித் துறை வளாகத்துக்கு பேராசிரியா் க.அன்பழகன் மாளிகை என பெயரையும் சூட்டினாா். க.அன்பழகன் எழுதிய 42 நூல்களை நாட்டுடைமையாக்கி அதன் மூலமாக உரிமத் தொகையை குடும்பத்தினரிடம் வழங்கினாா்.

பிறந்த தின நூற்றாண்டு கொண்டாட்டம் நிறைவடையவுள்ள நிலையில், பள்ளிக் கல்வி ஆணையரக வளாகத்துக்கு க.அன்பழகன் பெயா் சூட்டப்பட்டுள்ளதுடன், சிலை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

No comments:

Post a Comment