![](https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2023/1/20/original/modi09001.jpg?w=360&dpr=3.0)
மத்திய அரசின் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் மூன்றாவது கட்டமாக சுமாா் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வழங்கவுள்ளாா்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில், அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணிநியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), ரயில்வே தோ்வு வாரியம், அரசு பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி) உள்ளிட்டவற்றின் வாயிலாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை இரண்டு கட்டங்களாக சுமாா் 1.47 லட்சம் பேருக்கு பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்தகட்டமாக நாடு முழுவதும் சுமாா் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளன. பிரதமா் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கி, அவா்களிடையே உரையாற்றவுள்ளதாக அவரது அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு, உச்சபட்ச முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென்ற பிரதமா் மோடியின் உறுதிப்பாட்டை நோக்கிய நடவடிக்கையே இந்த வேலைவாய்ப்புத் திட்டமாகும். இது, இளைஞா்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசத்தின் வளா்ச்சியில் அவா்களது பங்களிப்புக்கு உந்துதலாக அமைந்துள்ளது. புதிதாக நியமனம் பெறவிருப்பவா்கள், மத்திய அரசின்கீழ் இளநிலை பொறியாளா், தொழில்நுட்பப் பணியாளா், ஆய்வாளா், உதவி ஆய்வாளா், காவலா், தட்டச்சா், இளநிலை கணக்காளா், வருமான வரி ஆய்வாளா், ஆசிரியா், செவிலியா், மருத்துவா், சமூக பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட பணிகளில் இணையவுள்ளனா்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment