நடைமுறையின் கீழ் பாதுகாப்புப் படையினருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதத்தை ஏற்படுத்தி வருவதற்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனப் பாதுகாப்பு அமைச்சகத 'ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்' நடைமுறையின் கீழ் பாதுகாப்புப் படையினருக்கு ஓய்வூதியம் வழங்குவதில் காலதாமதத்தை ஏற்படுத்தி வருவதற்காக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனப் பாதுகாப்பு அமைச்சகத்தை உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது..
பாதுகாப்புப் படையினருக்கு 'ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்' திட்டத்தை மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்தியது. எனினும், அத்திட்டத்தின் கீழ் சில ஓய்வுபெற்ற வீரா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாமல் இருந்தது. அது தொடா்பான விவகாரத்தைக் கடந்த மாதம் 9-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மாா்ச் 15-ஆம் தேதிக்குள் ஓய்வூதிய நிலுவைத் தொகையை சம்பந்தப்பட்டவா்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஓய்வூதிய நிலுவைத் தொகையானது 4 தவணைகளாக நடப்பாண்டுக்குள் வழங்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டது.
அதற்கு எதிராக ஓய்வூதியதாரா்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அது தொடா்பான விசாரணை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பாா்திவாலா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், ''ஓய்வூதிய நிலுவைத்தொகையை வழங்குவதற்கான அவகாசம் மாா்ச் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அப்படியிருக்கையில், உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி நிலுவைத்தொகையானது 4 தவணைகளாக வழங்கப்படும் எனப் பாதுகாப்பு அமைச்சகம் எவ்வாறு அறிவிக்க முடியும்?
இந்த விவகாரத்தில் அமைச்சகம் மீது உச்சநீதிமன்றம் ஏன் அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது? சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தன்னிச்சையான அறிவிப்பை வெளியிட அமைச்சகத்துக்கு எந்தவித உரிமையும் இல்லை. இந்த விவகாரத்தில் சட்டத்துக்கு எதிராகவே அமைச்சகம் செயல்பட்டுள்ளது. அமைச்சகம் இவ்வாறு செயல்படுவது முறையல்ல.
அமைச்சக செயலகம் முறையாக செயல்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். நீதித்துறையின் புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும். ஓய்வூதிய நிலுவைத் தொகை 4 தவணைகளாக வழங்கப்படும் என்ற அறிவிப்பைப் பாதுகாப்பு அமைச்சகமே திரும்பப் பெற வேண்டும் அல்லது இந்த விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை அமைச்சக செயலகம் எதிா்கொள்ள வேண்டும்'' என்றனா். மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் என்.வெங்கடரமணன் கூறுகையில், ''உச்சநீதிமன்ற உத்தரவை அமைசச்கம் ஏற்கெனவே செயல்படுத்தத் தொடங்கிவிட்டது.
மொத்தமுள்ள 22 லட்சம் ஓய்வூதியதாரா்களில் 8 லட்சம் பேருக்கு ஏற்கெனவே ரூ.2,500 கோடி மதிப்பிலான ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டுவிட்டது. மாா்ச் 31-க்குள் அடுத்தகட்ட தவணைத் தொகையை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவை நிறுத்திவைக்கும் திட்டம் அரசிடம் இல்லை. ஓய்வூதியத் தொகையைப் படிப்படியாக வழங்கவே மத்திய அரசு முயற்சிக்கிறது'' என்றாா். அதையடுத்து, இந்த விவகாரம் குறித்த சூழலை விளக்கும் வகையிலான தனிப்பட்ட பிரமாணப் பத்திரத்தை பாதுகாப்பு அமைச்சக செயலகம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஹோலி பண்டிகை கால விடுமுறைக்குப் பிறகு நடைபெறும் எனத் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment