தெலங்கானாவில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாகத்திற்கான அனைத்து எம்பிபிஎஸ் இடங்களையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், ஆண்டுக்கு 1,820 எம்பிபிஎஸ் சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில மருத்துவ சேர்க்கை விதிமுறையின்படி, மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 85 சதவிகித சீட்டுகள் தெலங்கானா மாணவர்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மருத்துவ சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டு நிர்வாக ஒதுக்கீட்டில் 100 சதவிகித எம்பிபிஎஸ் இடங்களையும் உள்ளூர் மாணவர்களுக்கு ஒதுக்கிடு செய்து, தெலங்கானா அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முன்னதாக தொடங்கப்பட்ட 20 மருத்துவக் கல்லூரிகளில் 2,850 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில், 1,895 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இருக்கும் நிலையில், அதில் 15 சதவிகித சீட்டுகளை ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பொது இடஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்டு வந்தன. இதில், பெரும்பாலான இடங்கள் தெலங்கானா மாணவர்களுக்கு கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில், 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தெலங்கானாவில் தொடங்கப்பட்ட 36 புதிய மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 100 சதவிகித எம்பிபிஎஸ் இடங்களையும் தெலங்கானா மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு தெலங்கானா மாநிலத்தில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,490 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment