பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ மாணவியருக்கான அசல் மதிப்பெண் சான்றுகள் அந்தந்த பள்ளிகளின் மூலம் வழங்கும் பணி தொடங்கியது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 7533 பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 வகுப்புகளில் படித்த மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் 8 லட்சத்து 3385 பேர் பங்கேற்றனர். அவர்களில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 13 பேர் மாணவியர். 3 லட்சத்து 82 ஆயிரத்து 371 பேர் மாணவர்கள். தேர்வு முடிவுகள் மே மாதம் 8ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 4 லட்சத்து 5 ஆயிரத்து 753 பேர் மாணவியர். 3 லட்சத்து 49 ஆயிரத்து 697 பேர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
மேற்கண்ட பிளஸ் 2 தேர்வில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் அனைவருக்குமான அசல் மதிப்பெண் சான்றுகள் ஜூலை மாதம் 31ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களின் மூலம் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. அதன்படி, பள்ளி மாணவர்கள் மற்றும் மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் உள்பட அசல் மதிப்பெண் சான்றுகள், மதிப்பெண் பட்டியல்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகின்றன. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதி தேர்வு மையம் மூலமாகவும் அசல் மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
No comments:
Post a Comment