Friday, September 22, 2023

3,660 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு.

3,660 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1990 முதல் 2019-ம் கல்வியாண்டு வரையிலான பல்வேறு காலங்களில் தரம் உயர்த்தப்பட்ட அரசுப்பள்ளிகளுக்கு 300 தலைமை ஆசிரியர்கள், 2,460 முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 760 தற்காலிக பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன.

இவர்களுக்கான பணிக்காலம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிந்துவிட்ட நிலையில், இந்தப்பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் அரசிடம் கேட்டு இருந்தார்.அதை பள்ளிக்கல்வித்துறை கவனமாக ஏற்று, தரம் உயர்த்தப்பட்ட அரசுப்பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட 2 ஆயிரத்து 760 தற்காலிக பணியிடங்களுக்கு 2026-ம் ஆண்டு வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல், 2011-2013-ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட 100 அரசுப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட 900 முதுநிலை ஆசிரியர்கள் பணிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது. இவர்களுக்கும் தொடர் நீட்டிப்பு ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.அவரின் கோரிக்கையை கவனமாக ஏற்று, தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் உள்ள 900 தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 2027-ம் ஆண்டு வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் அந்த ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் தாமதமின்றி கிடைக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News