Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, November 28, 2023

காஞ்சிபுரம் கூட்டுறவுச் சங்கங்களில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் ( Kancheepuram District Recruitment Bureau - 2023) வெளியிட்டுள்ளது.

இத்தேர்வுக்கு, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் www.drbkpm.in என்ற இணையதளம் வழியாக (through online only) 01.12.2023 அன்று மாலை 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான எழுத்துத் தேர்வு 24.12.2023 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது.

மொத்த காலிப்பணியிடங்கள்: 43

கல்வித் தகுதி: இதற்கான கல்வித் தகுதி எதேனும் ஒரு பட்டப்படிப்பு ( 10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும்.

வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் 2023- 24ஆம் ஆண்டு நேரடி பயிற்சி/ அஞ்சல்வழி / பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு (Diploma in Cooperative Management) சேர்ந்துள்ளவர்களும் இப்பணிக்கு உரிய சான்று/ கட்டணம் செலுத்தியதற்கான இரசீதினை காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

எழுத்துத் தேர்வு: எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு நிலையிலான தரத்துடனும், கூட்டுறவு மேலாண்மை கூட்டுறவு நிதி மற்றும் வங்கியியல், கூட்டுறவு கணக்கியல், கணினி பயன்பாடு, பொது அறிவு, தமிழ் போன்ற பாடங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகையில் (Objective Type) 200 வினாக்களுடன், 170 மதிப்பெண்களுக்கு ஆனதாக இருக்கும். தேர்வுக்கான கால அளவு 180 நிமிடங்கள் கொண்டதாகவும் இருக்கும். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வுக்கான மதிப்பெண் முறையே 85 : 15 என்ற விகிதத்தில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அரசாணைப்படியான இட ஒதுக்கீடு, இனச் சுழற்சி முறை, அவர்கள் தெரிவித்த முன்னுரிமை விருப்பச் சங்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் https://www.drbkpm.in/ வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment