அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் 1000 ரூபாய் நிதி வழங்கப்பட்டு வந்த நிலையில், மாணவர்களுக்கும் இந்தத் தொகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்கவும் 'தமிழ் புதல்வன்' என்ற மாபெரும் திட்டம் தொடங்கப்படும்.
தமிழ் புதல்வன் (Tamil Pudhalvan) திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று, உயர் கல்வியில் சேரும் மாணவர்கள் பாட புத்தகம், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்கள் கல்வியை மெருகேற்ற உதவிடும் வகையில் மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். ரூ. 360 கோடியில் தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படும்.
மாணவிகளுக்கு வழங்கியதைப் போலவே..
உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம் பெண்களின் உயர் கல்வியில் பெரும் முன்னேற்றத்தை எற்படுத்தியுள்ளது.
அதேபோல், அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும் அரசுப் பள்ளி மாணவரின் உயர் கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும்.
360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில், மாதந்தோறும்ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். இப்புதிய திட்டத்தின் மூலம் சுமார் மூன்று இலட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர். உயரிய நோக்கம் கொண்ட இத்திட்டத்தை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.










No comments:
Post a Comment