JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, April 22, 2024

நாளை ஏப்ரல் 23ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - கலெக்டர் உத்தரவு!

தேனி மாவட்டம் கூடலூர் பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் இந்தக் கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று படிமங்கள் உள்ளன. இந்த கோவில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று, வருடத்தில் ஒருநாள் மட்டும் இந்த கோவிலில் திருவிழா நடத்தப்படுகிறது.


அதன்படி மங்கலதேவி கண்ணகி கோவிலில் நடப்பாண்டு நாளை ஏப்ரல் 23ம் தேதி சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை அரசு அலுவலகங்களும், அரசு சார்ந்த துறைகளுக்கும் மற்றும் அனைத்து விதமான கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் தலைமை கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் மற்றும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைவான பணியாளர்களுடன், செயல்படும். மேலும் உள்ளுர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மே 4ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment