Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 11, 2024

கல்விக்கடன் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து லட்சம் ரூபாயாக உயர்வு.

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக் கடன், ஒரு லட்சம் ரூபாயிலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்தகக் கட்டணம், தங்குமிட கட்டணம், உணவுக் கட்டணம், டியூஷன் கட்டணம் என்பன உள்ளிட்ட பல்வேறு கல்வி கட்டணங்களை செலுத்த கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு வந்தது. கல்விக் கடன் பெறும் மாணவர்கள் கல்வி பயிலும் காலம் முடிந்து, 6 மாதங்கள் கழித்து அடுத்து வரும் 5 வருடங்களுக்குள், கடனை திருப்பி செலுத்த வேண்டும். இக்கல்வி கடனுக்கான அதிகபட்ச வட்டி விகிதம் 10% ஆகும்.மாணவர்கள்

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் மூலம், அங்கீகரிக்கப்பட்ட பட்டய படிப்பு மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் முறை படிப்புகளுக்கும் இந்த கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கும் கல்வி கடன்கள் வழங்கப்படுகிறது. இதே போல் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தால் (டாம்கோ) சிறுபான்மையின மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவற்றில் இந்த கடன்கள் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனங்களில், மாணவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து கல்விக் கடனை பெற்றுக் கொள்ளலாம். இந்த நிலையில் ஒரு லட்சம் ரூபாயாக இருந்த இந்த கடன் உதவி ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இளைஞர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு கல்வி மிகவும் அவசியமாகும். கல்லூரிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு குடும்ப வருமானம் தடையாக இருக்கக் கூடாது என கருதி புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, தற்போது வழங்கப்படும் கடன் உதவி 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்தி கல்விக் கடன் பெற்று, தங்களது கல்விக் கனவை நனவாக்கிக் கொள்ள வேண்டும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment