Monday, July 8, 2024

தவறிழைத்தவர்களை கண்டறியாவிட்டால் நீட் மறு தேர்வு - உச்சநீதிமன்றம் அதிரடி..!

நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அமர்வில் நடைபெற்று வருகிறது. மனுதாரர்கள் தரப்பில் பல்வேறு வழக்கறிஞர்களும், தேசிய தேர்வு முகமை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இதில் நீட் தேர்வு வினாத்தாள் ஒரு மையத்தில் கசிந்தது உண்மை என தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டது.

நீட் வினாத்தாள் கசிந்தது என்பது நடந்த ஒன்று என தெரிவித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சமூக ஊடகங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை என்றால் அது மிகப்பெரியதாக இருக்க வாய்ப்புள்ளது என்றார்.

மேலும் படிக்க : சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம்.. இவர் யார் தெரியுமா?

வினாத்தாள் காட்டுத்தீ போல் பரவி இருக்கும். 20 லட்சம் மாணவர்களின் வாழ்க்கை சார்ந்தது இது. நீட் வினாத்தாள் எப்போது தயாரிக்கப்படுகிறது? எப்போது அச்சிடப்படும்? மையங்களுக்கு அனுப்புவது எப்போது?. வினாத்தாள் கசிவு, தேர்வு நடக்கும் நேரம் ஒத்துப் போகிறது என்றால் அது தீவிரமாக விசாரிக்கப்படும்.

நீட் முறைகேடு விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் கண்டறியப்பட்டால் மறுதேர்வு தேவையில்லை. பயனடைந்தவர்கள், தவறிழைத்தவர்களை கண்டறியாவிட்டால் நிச்சயம் மறுதேர்வு நடத்த வேண்டும்.

வினாத்தாள் கசிவு குறித்து சிபிஐ, என்டிஏ ஜூலை 10-க்குள் பதிலை தாக்கல் செய்ய வேண்டும். நீட் முறைகேட்டை தடுக்க ஒழுங்கு நடைமுறைக் குழுக்களை மத்திய அரசு அமைக்க பரிசீலிக்கலாம். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்பிக்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News