Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, September 14, 2024

TNPSC குருப்-2 மற்றும் குருப்-2ஏ முதல்நிலைத் தேர்வு விடைகள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியீடு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் இன்று காலை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குருப்-2 மற்றும் குருப்-2ஏ முதல்நிலைத் தேர்வை 5 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுதினர்.

அதே சமயம், இந்த தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேர் தேர்வில் கலந்து கொள்ளாமல் ஆப்சென்ட் ஆனார்கள்.

குருப்-2 பதவிகளில் 507 காலியிடங்கள், குருப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்கள் என மொத்தம் 2,327 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் 2,763 மையங்களில் சனிக்கிழமை நடந்தது. தேர்வெழுத 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 305 பேர் மட்டுமே தேர்வெழுதினர். எஞ்சிய 2 லட்சத்து 12 ஆயிரத்து 661 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது.


டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'குருப்-2 முதல்நிலைத் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்ஸர்) ஒரு வாரத்தில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். உத்தேச விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தேவையான ஆதாரங்களுடன் ஆன்லைனில் முறையிடலாம். விடைத்தாள் மதிப்பீட்டு பணி 2 அல்லது 3 மாதங்கள் நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக மெயின் தேர்வு நடத்தப்படும்.

நாங்கள் வெளியிட்ட வருடாந்திர தேர்வு கால அட்டவணையின்படி, இந்த ஆண்டு 10 தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அதன்படி, 8 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இன்னும் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். இந்த ஆண்டு இதுவரை வெவ்வேறு துறைகளுக்கு 10,215 பேர் தேர்வுசெய்யப்பட்டு பணிவாய்ப்பு பெற்றுள்ளனர். இன்னும் 10 ஆயிரம் பேரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே நடந்த குருப்-4 தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் வெகுவிரைவில் வெளியிடப்படும்,' என்று அவர் கூறினார்.


வினாத்தாள் கடினம்: குருப்-2 முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு மற்றும் கணிதத்திறன் தொடர்பான 100 கேள்விகளும், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் தொடர்பான 100 கேள்விகளும் கேட்கப்பட்டன. பொது அறிவு பகுதி மற்றும் பொது தமிழ் பகுதியில் வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாக பல தேர்வர்கள் கருத்துத் தெரிவித்தனர். அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பான கேள்விகள் பெரிதாக இடம்பெறவில்லை என்றும் அவர்கள் ஆதங்கப்பட்டனர். அதேசமயம், பொது ஆங்கிலம் பகுதி வினாக்கள் எளிதாக இருந்ததாக அப்பகுதியை தேர்வு செய்தவர்கள் கூறினர்.

கட் ஆப் மார்க் குறைய வாய்ப்பு: முதல்நிலைத் தேர்வில் மெயின் தேர்வுக்கு 'ஒரு காலியிடத்துக்கு 10 பேர்' என்ற விகிதாச்சார அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த வகையில், தற்போது 2,327 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் ஏறத்தாழ 24 ஆயிரம் பேர் மெயின் தேர்வெழுத தகுதிபெறுவர். ஒருவேளை, காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் இன்னும் அதிகமானோருக்கு மெயின் தேர்வெழுத வாய்ப்புக் கிடைக்கும்.

முதல்நிலைத் தேர்வு சற்று கடினமாக இருப்பதாக தேர்வர்கள் மத்தியில் கருத்து நிலவுவதால் கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. சாதாரணமாக 200 கேள்விகளுக்கு 150 அல்லது 160 கேள்விகளுக்கு சரியாக விடையளித்தால் மெயின் தேர்வெழுதலாம். வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறியிருப்பதால் சுமார் 140 கேள்விகளுக்கு சரியாக விடையளித்திருந்தால் மெயின் தேர்வெழுத வாய்ப்புக் கிடைக்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News