Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் மிக முக்கியமான ஒன்று பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது என்பதுதான். தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இழப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது.
தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி வலியுறுத்தி வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை இப்போது மற்ற மாநிலங்கள் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் ஏன் அமல்படுத்த யோசிக்கின்றனர் என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதுவும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தும் அதை நிறைவேற்றவில்லை.
சிபிஎஸ் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற பெயரில் அரசு ஊழியர்கள் ஒன்றாக இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டிசம்பர் 9ஆம் தேதியன்று சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில நிதிக் காப்பாளர் சென்னையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் ஜி. கே. மணி மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள், திரு. சிவகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திருத்துறைப்பூண்டி மாரிமுத்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மனிதநேய மக்கள் கட்சி மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது ஆகிய சட்டமன்ற கட்சித் தலைவர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்த சட்டமன்றத்தில் ஆதரவு தருமாறும் கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்ததாகவும், விரைவில் தங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கமும் அதிலுள்ள அரசு ஊழியர்களும் காத்திருக்கின்றனர்
No comments:
Post a Comment