Join THAMIZHKADAL WhatsApp Groups

நாடு முழுவதும் 20 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்-யூஜி 2025’ தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது.
மாணவர்கள் இந்த விடைக்குறிப்பின் மீது தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்தது. மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு (பைனல் ஆன்ஷர் கீ) தயாரிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும்.
இந்நிலையில், நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இந்த வாரம் வெளியிட உள்ளது. வரும் 14ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை
neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று,
‘NEET UG 2025 Result’ என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால், தேர்வு முடிவு பிடிஎப் வடிவில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15% இடங்களுக்கு (எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட) மருத்துவ கலந்தாய்வு குழு கலந்தாய்வை நடத்தும். மீதமுள்ள 85% இடங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் கலந்தாய்வை நடத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment