
தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி பொதுத் தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். "உங்கள் ஸ்டாலின் முகாம்" அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் அன்பில் மகேஷ், "ஓரணியில் தமிழ்நாடு" திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் சிலர் நீதிமன்றம் சென்றுள்ளார்கள். எது எப்படி இருந்தாலும், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி நாங்கள் செயல்படுவோம். திட்டத்தின் பெயரை வைத்தும் சிலர் அரசியல் செய்து வருகிறார்கள்" என்று கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு, அமைச்சர் அன்பில் மகேஷ், "தற்போது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டார். மக்கள் கூட்டத்திற்கு முன் ஏதாவது பேச வேண்டும் என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை. அவர் மற்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்கிறார். ஆனால் அவருடைய அழைப்பை அனைவரும் நிராகரித்து வருகிறார்கள்" என்று விமர்சித்தார்.
திமுகவில் உதயநிதி ஸ்டாலின் வளர்ச்சி குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தது பற்றி, "உதயநிதி ஸ்டாலின் திமுகவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இளம் தலைவராக இருக்கிறார். எங்கள் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கவலைப்படத் தேவையில்லை" என்று அன்பில் மகேஷ் பதிலளித்தார்.






No comments:
Post a Comment