JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, September 15, 2025

எத்தனை பேர் 'டெட்' தேர்ச்சி பெற்றவர்கள்? தனியார் பள்ளிகளிலும் விவரம் சேகரிப்பு

கோவையில் உள்ள தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 'டெட்' (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு விவரங்களையும், மாவட்ட கல்வித்துறை சேகரிக்கத் துவங்கியுள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க, 'டெட்' தேர்வு கட்டாயம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 273 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள், 285 உயர்நிலை மற்றும் மேல்நிலை, மெட்ரிக் பள்ளிகள் செயல்படுகின்றன.

நர்சரி பள்ளிகளில் 2,000 ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளில் 8,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.

பள்ளிகளின் தரத்திற்கேற்ப, ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் 'டெட்' கட்டாயம் என்ற தீர்ப்பு வெளியானதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

தற்போது தனியார் பள்ளிகளிலும், டெட் தேர்ச்சி விவரங்களை தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வித்துறை சேகரித்து வருகிறது. மாவட்ட கல்வி அதிகாரி (தனியார்) புனித அந்தோணியம்மாள், இதை உறுதிப்படுத்தினார்.

தகுதியானவர்களையே ஆசிரியராக நியமிக்கிறோம்' ''பெரும்பாலான தனியார் பள்ளிகளில், பி.எட். முடித்தவர்களே ஆசிரியர் பணியில் உள்ளனர். ஆசிரியருக்கு தேவையான அனைத்து தகுதிகளும் உள்ளவர்களையே பணியில் சேர்க்கின்றோம். புதிய தீர்ப்பால், ஆசிரியர் பணியில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது,'' என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment