Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 29, 2025

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 7 பாடங்கள்



சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், அடுத்த கல்வியாண்டு முதல், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஏழு பாடங்களுக்கு நடத்த உள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமானது, மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி செயல்படுகிறது.

தங்களது இணைப்பு பள்ளிகளுக்கான வரையறைகளை, மத்திய கல்வி அமைச்சக ஆலோசனைப்படி, அவ்வப்போது மாற்றி அமைக்கிறது.

இதற்கான பாடப்புத்தகங்களை, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., வாயிலாக வழங்கி வருகிறது.

புதிய கல்வி கொள்கையின்படி, இந்த ஆண்டு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்ச்சி திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பில் இரண்டு முறை பொதுத்தேர்வு எழுதுவதும் அறிமுகமாகி உள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல், ஏற்கனவே இருந்த ஐந்து முதன்மை பாடங்களுடன், ஒரு திறன் சார்ந்த பாடம் மற்றும் கூடுதலாக ஒரு இந்திய மொழி பாடத்தையும் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, ஆங்கிலம், ஹிந்தி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு, இதுவரை தேர்வு நடத்தப்பட்டு வந்தது.

இனி, மாணவர்கள், ஆங்கிலம், ஹிந்தியுடன் கூடுதலாக இன்னொரு மொழிப்பாடமும் படிக்க வேண்டும். அது, இந்திய மொழியாக இருக்க வேண்டும். அடுத்ததாக, தொழில் சார்ந்த ஒரு பாடத்தையும் பயில வேண்டும்.

அதாவது, கணக்கீட்டு சிந்தனை, உடற்கல்வி, நலவாழ்வு, கலைக்கல்வி, சுற்றுச்சூழல், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், சில்லரை விற்பனை, சந்தைப்படுத்துதல், நிதிசார் கல்வி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம்.

No comments:

Post a Comment