Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Thursday, January 29, 2026

இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்!


நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் ரூ. 10, 20 மற்றும் 50 மதிப்புள்ள நோட்டுகளை வைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகின்றது.

நாட்டில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் யுபிஐ, டெபிட் - கிரெடிட் கார்டு போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைக்கு வேகமாக மாறி வருகின்றனர்.

யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தை செய்யும் முறை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் ரூ. 28 லட்சம் கோடி பணப் பரிவர்த்தை நடைபெற்றுள்ளது. கடந்த ஒரே ஆண்டில் மட்டும் கிட்டத்திட்ட ரூ. 300 லட்சம் கோடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

இருந்தாலும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைக்கு மாறாத மக்களும், சிறிய வியாபாரிகளும் அன்றாட பரிவர்த்தனைகளுக்கு பணத்தையே நம்பியுள்ளனர்.

கடைகளில் ரூ. 500 நோட்டை கொடுத்து ஒருவர் பொருள் வாங்கினால், அவருக்கு மீதிச் சில்லறைகூட கொடுக்க முடியாத வகையில் வியாபாரிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

ஏடிஎம்களிலும் ரூ.1,000, ரூ.500, ரூ.100 ஆகிய கரன்சி நோட்டுகள் மட்டுமே உள்ளதால் குறைந்த மதிப்புள்ள பணம் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகின்றது.

இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் ரூ. 10, 20 மற்றும் 50 மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ. 500, 200 போன்ற நோட்டுகளை கொடுத்து சிறிய மதிப்புள்ள நோட்டுகளை பெறும் வகையில் ’ஹைப்ரிட் ஏடிஎம்’கள் வைக்கப்படவுள்ளன.

தற்போது மும்பையில் சோதனை முறையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறக் கூடிய உள்ளூர் சந்தைகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் நிறுவப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ’ஹைப்ரிட் ஏடிஎம்’கள் நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முயற்சி, வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தையும், இன்னும் முழுமையாக டிஜிட்டல் மயமாகாத கோடிக்கணக்கான மக்களின் அன்றாடப் பணத் தேவைகளையும் சமநிலைப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment