சிறப்பு `டெட்' தேர்வுக்கு `எமிஸ்' தளத்தின் மூலம் எளிமையாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு பள்ளிக்கல்வி அமைச்சருக்கு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் த.ராமஜெயம், மாநில பொதுச் செயலாளர் வெ.சரவணன் ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை: பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்துகொண்டிருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஒவ்வோர் ஆசிரியருக்கும் பணிப்பதிவேடு (எஸ்ஆர்) பராமரிக்கப்படுகிறது.
அதில், அவர்கள் பணியில் சேர்ந்த நாள், கல்விச் சான்றிதழின் பதிவு அவற்றின் உண்மைத் தன்மை பதிவுகள், தகுதிகாண் பருவம், பணிவரன் முறை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும்.
மேலும் ஆசிரியர் இடமாறுதல் விண்ணப்பங்கள் தற்போது பள்ளியிலேயே அந்தந்த ஆசிரியர் ஐடி மூலம் பதிவு செய்து பணி மாறுதல் ஆணை வழங்கும் மின்-ஆளுமை வசதியும் உள்ளது. எனவே, சிறப்பு டெட் தேர்வுக்கு ஆசிரியர்கள் எமிஸ் ஐடி மூலம் எளிமையாக விண்ணப்பிக்க பள்ளிக்கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.




No comments:
Post a Comment