Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Thursday, February 26, 2026

தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலெக்டரிடம் புகார்

பள்ளி வளாகத்தில், மாணவனின் புத்தக பையிலிருந்து எடுக்கப்பட்ட கஞ்சாவை எரியூட்டி, உரிய விசாரணை நடைபெற விடாமல் தடுத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி, திருப்பூர் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

திருப்பூர் - கொங்கு மெயின் ரோட்டிலுள்ள மாநகராட்சி பள்ளியில், பிளஸ் 2 மாணவனின் புத்தக பையிலிருந்து, டிச., 19ம் தேதி, கஞ்சா மற்றும் கஞ்சா நிரப்பப்பட்ட சிகரெட் இருந்தது கண்டறியப்பட்டு, அவற்றை தலைமை ஆசிரியர் பறிமுதல் செய்தார்.

அம்மாணவனிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய தலைமை ஆசிரியர், உரிய விசாரணை நடத்தாமல், கஞ்சாவை எரியூட்டியதாக புகார் எழுந்துள்ளது.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் சகாயமேரி, அம்மாணவனிடம் எழுதி வாங்கிய மன்னிப்பு கடித நகலை இணைத்து, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனுவாக அளித்தார்.

மாணவனிடம் கஞ்சா இருந்தது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் அளித்துவிட்டு, கஞ்சாவை போலீசில் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், பறிமுதல் செய்த கஞ்சாவை, பள்ளி வளாகத்துக்குள்ளேயே தலைமை ஆசிரியர் எரியூட்டியுள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் கஞ்சா புழக்கம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாளிடம் கேட்டபோது, ''மாணவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மாணவருக்கு எவ்வித போதை பழக்கமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ''அவரது சகோதரருக்கு, இப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது. அவர் புத்தக பையில் மறைத்து வைத்திருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment