Breaking

Monday, February 23, 2026

TET - பணி சான்றிதழ் வழங்க இத்தனை ஆவணங்களா! குழப்பும் அதிகாரிகள்; அதிருப்தியில் ஆசிரியர்கள்


பணி சான்றிதழ் வழங்க, ஏற்கனவே பணிப்பதிவேட்டில் பராமரிக்கப்படும் ஆவணங்களின் நகல்களை, மீண்டும் இணைத்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கட்டாயக்கல்வி உரிமைச்சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை கையாளும் அனைவரும், ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணியை தொடரவும், பதவி உயர்வுக்கும் இத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனால், அரசு, உதவிபெறும், தனியார் பள்ளிகளில் பணி புரிவோருக்கு சிறப்பு டெட் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு ஆன்லைனில் (www.trb.tn.gov.in) விண்ணப்பிக்க, ஏப்., 10 கடைசிநாளாகும். இதற்கான விண்ணப்பித்தில், பணிசான்றிதழ் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படிவம், டி.ஆர்.பி., இணையதளத்தில் உள்ளது. இதை பூர்த்தி செய்து, தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலர் கையொப்பத்துடன், சான்றிதழைபதிவேற்ற வேண்டும். இச்சான்றிதழில் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள், கல்வித்தகுதி, தற்போது பணி புரியும் பதவி, பள்ளி சார்ந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

இத்தகவல் ஏற்கனவே, ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உள்ளது. இப்பதிவேடு, வட்டார கல்வி அலுவலகம் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர் வசம் பராமரிக்கப்படுகிறது. மேலும், ஆசிரியர்களுக்கான 'எமிஸ்' இணையதளத்திலும் உள்ளது. இதே ஆவணங்களை நகலெடுத்து, பணிசான்றிதழ் கடிதத்துடன் இணைத்து அனுப்புமாறு கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கோவை நிர்வாகி சந்திரசேகர் கூறுகையில்,''பணிப்பதிவேடு மற்றும் 'எமிஸ்' போர்டலில், ஆசிரியர்களின் அனைத்து விபரங்களுக்கான அசல் சான்றிதழ்கள் உள்ளன.

இதை பார்வையிட்டு, பணிசான்றிதழ் வழங்கலாம். ஒவ்வொரு ஆசிரியரும், 30-50 பக்கம் நகல் எடுத்து சமர்பிக்க வேண்டியுள்ளது. ஒரு சான்றிதழ் வழங்க, பல ஆவணங்களின் நகல்களைகேட்பது, ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவோருக்கும் பணிச்சுமையை ஏற்படுத்தும்,'' என்றார்.

No comments:

Post a Comment