Breaking

Monday, March 9, 2026

தேர்வு பணியில் உறுதிமொழி சான்று: ஆசிரியர்கள் எதிர்ப்பு


பொதுத்தேர்வு பணியில் ஈடு படுவோரிடம், உறுதிமொழி சான்றில் கையெழுத்து பெறுவதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் துவங்கி உள்ளன.

10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, வரும் 11ம் தேதி துவங்குகிறது. இந்நிலையில், தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்களின் அலைபேசிகளை, தேர்வு கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்து விட்டு, உறுதிமொழி சான்றிதழில் கையெழுத்திட வேண்டும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. அந்த உறுதிமொழி படிவத்தில், 'தேர்வு பணியின் போது, தேர்வு மையத்துக்கு வருகை புரிந்ததில் இருந்து, பணி முடிந்து செல்லும் வரை, என் அலைபேசியில் இருந்து, தேர்வு வினாத்தாள் தொடர்பாக எந்த செய்தியையும் பகிரவில்லை என உண்மையாக உறுதியளிக்கிறேன்; எந்தவித களங்கம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபடவில்லை' என கூறப்பட்டுள்ளது. இந்த உறுதிமொழி படிவத்துக்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலர் அன்பழகன் கூறுகையில், ''தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம், குற்றவாளிகள் கண்ணோட்டத்தில் உறுதிமொழி சான்று கேட்பது ஏற்புடையதல்ல. இது, ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. உறுதிமொழி பெறும் நடைமுறையை, பள்ளிக்கல்வித் துறை ரத்து செய்ய வேண்டும்' என, தெரிவித்தார்.

No comments:

Post a Comment