Subscribe Us

Saturday, August 29, 2026

செப்.3 முதல் ஆயுஷ், இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு:

AYUSH Rank List 2026 சேர்க்கைக்கான கலந்தாய்வு 3 வழக்கமான சுற்றுகளாகவும் (Regular Rounds), அதனைத் தொடர்ந்து காலியிடங்களை நிரப்பும் சுற்றாகவும் (Stray Vacancy Round) நடைபெறும்.

சென்னையில் ஆயுஷ், பிஎன்ஒய்எஸ் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: செப்டம்பர் 3-இல் கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாட்டில் 2026-27 கல்வியாண்டுக்கான இளநிலை ஆயுஷ் மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது. அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் மொத்தம் 2,224 ஆயுஷ் இடங்களும், 2,036 பிஎன்ஒய்எஸ் இடங்களும் உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் வெள்ளிக் கிழமை தெரிவித்தார்.

சித்த மருத்துவம் (பிஎஸ்எம்எஸ்), ஆயுர்வேதம் (பிஏஎம்எஸ்), யுனானி (பியூஎம்எஸ்), ஹோமியோபதி (பிஹெச்எம்எஸ்) மற்றும் யோகா, இயற்கை மருத்துவம் (பிஎன்ஒய்எஸ்) ஆகிய படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

இந்தப் படிப்புகளில் சேர்வதற்காக மொத்தம் 11,850 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 10,849 விண்ணப்பங்கள் தகுதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் 1,077 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவற்றில் 906 விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்களில் யார் முதலிடம்?

7.5 சதவீத அரசுப் பள்ளி ஒதுக்கீட்டில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ப. தமிழருவி 516 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சு. பிருந்தா ஸ்ரீ இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

அரசு ஒதுக்கீட்டில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பி. கிராந்திக் முதலிடத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே. தியாகராஜ் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மேலாண்மை மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டிலும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே. தியாகராஜ், வி. ஹேமாவதி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தரணி கண்ணன் உள்ளிட்டோர் முன்னணி தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர்.

மூன்று சுற்று கலந்தாய்வு

ஆயுஷ் மற்றும் பிஎன்ஒய்எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கும். முதலில் மூன்று வழக்கமான கலந்தாய்வு சுற்றுகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களை நிரப்புவதற்காக காலியிடங்களுக்கான சிறப்பு சுற்று நடத்தப்படும்.

இதனால் தகுதி பெற்ற மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்பையும் கல்லூரியையும் தேர்வு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

தமிழ்நாடு அரசு, நோய்கள் ஏற்பட்ட பிறகு சிகிச்சை அளிப்பதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், அவை ஏற்படுவதற்கு முன்பே தடுக்கும் வகையில் ‘நேர்மறை சுகாதாரக் கொள்கையை’ உருவாக்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பாரம்பரிய வாழ்க்கை முறை, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் சமச்சீர் உணவு ஆகியவற்றின் மூலம் நோய்களைத் தடுப்பதற்கான முதன்மை மற்றும் ஆரம்ப நிலை தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்தக் கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.

16 வகை சிகிச்சைகளுடன் புதிய மையம்

இதற்கிடையே, சென்னை அண்ணா நகரில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரக வளாகத்தில் 16 வகையான சிகிச்சைகளை வழங்கும் இந்திய மருத்துவ ஒருங்கிணைந்த நலவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் உடல் புத்துணர்ச்சி, வலி மேலாண்மை மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் சிகிச்சைகள் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகின்றன. பொதுமக்களுக்கான சில பொது சேவைகள் இலவசமாகவும் வழங்கப்படுகின்றன.

செங்கல்பட்டில் உள்ள சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் 28 படுக்கைகள் கொண்ட தங்கியிருந்து புத்துணர்வு சிகிச்சை பெறும் வசதியும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மேலும், மலைப்பகுதிகளில் நலவாழ்வு மற்றும் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed