
போக்சோ சட்டத்தின் கீழ், ஒரு குழந்தையுடனான உடல்ரீதியான தொடர்பு பாலியல் நோக்கத்துடன் இருந்தால் மட்டுமே பாலியல் வன்கொடுமையாக அமையும் என்று நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துவாரை சேர்ந்த பாஸ்கர் பால் என்ற புவியியல் ஆசிரியர், தான் கற்பித்த பள்ளியில் மாணவிகளின் முதுகைத் தடவியதாகவும், இடுப்பு பகுதியில் கிள்ளியதாகவும், கழுத்தைத் தொட்டதாகவும் எழுந்த புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு விசாரணை நடத்தி சமர்ப்பித்த அறிக்கை அடிப்படையில் போக்சோ சட்டத்தின் 10-வது பிரிவின் கீழ் அந்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தன் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி பாஸ்கர் பால் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பாஸ்கர் பால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனு நீதிபதிகள் உஜ்ஜல் புயான், அதுல்.எஸ்.சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாணவர்கள் அளித்த வாக்குமூலங்களை தீவிரமாக ஆராய்ந்தபோது, ஆசிரியரின் செயல் உடல்ரீதியான தண்டனையை வெளிப்படுத்தியதாகவும், ஆனால் பாலியல் வன்கொடுமையையோ, பாலியல் நோக்கத்தையோ வெளிப்படுத்தவில்லை. ஆசிரியர் தங்களைப் பாலியல் நோக்கத்துடன்தான் தொட்டார் என்பதை எந்த வாக்குமூலங்களும் சுட்டிக்காட்டவில்லை.
ஆசிரியர் உடல்ரீதியான தண்டனை வழங்கியது பொருத்தமற்றது என்றாலும், அத்தகைய நடத்தை மட்டுமே போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான பாலியல் வன்கொடுமை என வழக்குத் தொடர்வதை நியாயப்படுத்த முடியாது. அதனால், இந்த வழக்கு விசாரணையைத் தொடர அனுமதிப்பது சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமமாகும்.
எனவே, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல அலிபுர்துவார் சிறப்பு நீதிமன்றத்தில் ஆசிரியருக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.