சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து மறைக்கும் சூரிய கிரகணம் நாளை நடைபெற இருக்கிறது. இந்த கிரகணத்தில் பகுதி அளவே சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணத்தைச் சுற்றி நெருப்பு வளையம் போன்று காட்சி அளிக்கும் என அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா என்ற கேள்வி நீண்ட காலமாக பொதுமக்களிடையே எழுந்து வருகிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா என்பது குறித்து அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இந்தக் கட்டுரையில் காண்போம்
சூரிய கிரகணத்தின் போது வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்ற கருத்து நிலவுகிறது. இது குறித்து அறிவியல் அறிஞர்கள் கூறும் போது, கிரகணம் நிகழும் சமயத்தில் சூரியனில் இருந்து வெளியேறும் புற ஊதாக் கதிர்களால் உடல் நலம் பாதிக்கும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. அது குறித்து, மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், எழுத்தாளருமான தா.வி.வெங்கடேஸ்வரன் அளித்த விளக்கத்தில் சூரிய கிரகணத்தின் போது மட்டுமல்லாது எப்போதுமே வெறும் கண்ணால் சூரியனைப் பார்க்கக் கூடாது. அதிக ஒளியை தொடர்ந்துப் பார்க்கும் பொழுது நமது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சூரியன் மட்டுமல்லாது வெல்டிங் வெளிச்சம் , பல்ப்பின் வெளிச்சம் போன்ற பிரகாசமான ஒளியை எப்போதும் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. பிரகாசமான ஒளியை உற்றுப் பார்க்கும் போது நம் கண்களில் உள்ள நிறமி பாதிக்கப்படும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களை வளி அடுக்கில் இருக்கும் ஓசோன் தடுக்கிறது. இருந்தாலும் கூட வெப்ப மயமாதலால் ஓசோனில் ஏற்பட்ட ஓட்டை சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களை பூமியில் அனுமதிக்கும் வாய்ப்பும் இருக்கிறது.
சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்ப்பதால் பார்வையை இழக்க நேரிடும் என சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் மோகன் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் 50 முதல் 90 வினாடிகள் பார்க்கும் பொழுது சூரியனின் கதிர்கள் விழித்திரையின் மத்தியப் பகுதியை பாதிக்கும். இதனால் பார்வைக் குறைதல் முதல் பார்வை இழப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.