Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 2, 2018

விண்ணப்பித்த மறு நிமிடத்தில் பான் எண்: புதிய சேவை அறிமுகம்


ஆதார் அடிப்படையில் உடனடியாக பான் எண் வழங்கும் புதிய திட்டத்தை வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதன்படி, இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த ஓரிரு நிமிடங்களில் நிரந்தரக் கணக்கு எண்ணை (பான் எண்) விண்ணப்பதாரர்கள் பெற முடியும். அதற்கு அடுத்த சில நாள்களில் அச்சிடப்பட்ட பான் அட்டை சம்பந்தப்பட்டவர்களின் வீட்டு முகவரிக்கு அஞ்சல் வழியே அனுப்பப்படும்.



இந்தப் புதிய திட்டமானது, பொது மக்களின் செளகரியத்துக்காவும், ஆதார் மூலமாக அரசு சேவைகளைப் பெறுவதை ஊக்குவிப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. 

இத்திட்டமானது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே அமலில் இருக்கும் என்றும், முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பான் எண் வழங்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையைப் பெற http://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று பொது மக்கள் பான் எண் கோரி விண்ணப்பிக்கலாம். 



அப்போது ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களை அளித்தால் சம்பந்தப்பட்டவரது செல்லிடப்பேசி எண்ணுக்கு கடவுஎண் (ஓடிபி) தொடர்பான குறுஞ்செய்தி வரும். அந்த எண்ணை விண்ணப்பத்தில் பூர்த்தி செய்த ஒரு சில நிமிடங்களுக்குள் விண்ணப்பதாரருக்கு பான் எண் வழங்கப்பட்டுவிடும்.
ஆதார் அட்டையில் இடம்பெற்றுள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவை அப்படியே பான் அட்டையிலும் பதிவேற்றப்படும். அத்தகவல்களுடன் அச்சிடப்படும் அட்டைகள் அதற்கு அடுத்த சில நாள்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 

இந்த சேவையை தனி நபர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மாறாக அறக்கட்டளைகள், சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை இத்திட்டத்தின் கீழ் பான் எண் பெற இயலாது.

தனி நபர்கள் வருமான வரித் தாக்கல் செய்யும் நடைமுறைகளை எளிமையாக்கும் பொருட்டு இத்தகைய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.