Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 19, 2018

இருளில் மொபைல்போன் பார்த்தால் பார்வை பறிபோகுமா... தவிர்ப்பது எப்படி?


இருளில் மொபைல்போன் பார்த்தால் பார்வை பறிபோகுமா... தவிர்ப்பது எப்படி?

இருளாக இருக்கும் இடங்களில் திரைகளைப் பார்த்தால், அதிலிருந்து வெளிவரும் நீல நிற ஒளியால் கண் கோளாறுகள் ஏற்படலாம், பார்வை பறிபோகும் அபாயமும் இருக்கிறது.



மொபைல்போன்கள், கம்ப்யூட்டர், டிவி திரைகளை அதிக நேரம் பார்ப்பது குழந்தைகள், பதின்பருவத்தினருக்கு கண் மற்றும் உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. அதிக நேரம் ஸ்கிரீன்களைப் பார்ப்பது உடல்பருமன், கண் வறண்டு போவது, தலைவலி, கண் வலி, தூக்கமின்மை, கிட்டப்பார்வை ஏற்படலாம்.


மொபைல்போன், வீடியோகேம் போன்றவற்றை பயன்படுத்தாமல் குழந்தைகளைத் தடுப்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான். திரைகளை அதிக நேர பார்க்காமல் தடுப்பதற்கும், அதனால் வரும் உடல்நலக் கோளாறுகளைத் தவிர்ப்பதற்கும் சில ஆலோசனைகள் இதோ...

இடைவேளை தேவை...

அமெரிக்க கண் மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் கே.டேவிட் எப்லே, `` நீங்கள் அதிக தூரம் ஓடினால், உங்கள் கால்கள் வலிக்கும், அதனால் சிறிது நேரம் ஓய்வு கொடுப்பீர்கள். அதேபோல தான் கண்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும். 20 நிமிடங்கள் படித்தாலோ, திரைகளைப் பார்த்தாலோ, 20 வினாடிகளுக்கு தூரமாக பார்வையைச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் இப்படிச் செய்யவேண்டும். இது, கண்கள் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும்.



மொபைல்போன் உள்ளிட்டவற்றின் திரைகளை அதிக நேரம் பார்ப்பதைத் தவிர்த்து, புத்தகங்களைப் படிக்கலாம். படிக்கும் போதும் போதுமான இடைவேளையில் தூரமாகப் பார்வையைச் செலுத்த வேண்டும். குழந்தைகள், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது 2 மணி நேரத்துக்கு மேல் திரைகளைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம். பெற்றோர்கள், குழந்தைகள் எவ்வளவு நேரம் மொபைல்போன், வீடியோக்களைப் பார்க்கிறார்கள் என்பதைக் கண்காணித்து, அந்த நேரத்தைக் குறைக்க வேண்டும்’’ என்கிறார்.

பெற்றோர்களே முன்னுதாரணம்...

குழந்தைகள் மொபைல்போன் உள்ளிட்ட திரைகளைப் பார்ப்பதைக் குறைக்க, முதலில் பெற்றோர்கள் அதைக் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு முன்னுதாரணாமாக இருந்து, அவர்களின் அந்தப் பழக்கத்தைக் குறைக்க முயற்சிப்பது நல்லது. மொபைல்போன்களைப் பார்க்கும் நேரங்களில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கண்ணாடிகளை அணிவிக்கலாம்.