JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, October 19, 2018

வடகிழக்குப் பருவமழை: அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை!




வடகிழக்குப் பருவமழையின்போது, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் வருவாய்த் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

வரும் 21ஆம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கச் சாதகமான சூழ்நிலை உள்ளது எனவும் தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 12 சதவிகிதம் அதிகமாகப் பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு நேற்று மையம் தெரிவித்தது.

வளி மண்டலத்தில் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி தெற்குக் கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுவதால், அடுத்த இரண்டு நாட்களுக்குத் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பருவமழையின்போது, தமிழகம் முழுவதும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



மாவட்ட அளவில் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய குழுக்களை உருவாக்க வேண்டும் எனவும் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளுக்குச் சிறப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, வடகிழக்குப் பருவமழையின்போது, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் வருவாய்த் துறை சார்பில் நேற்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

அதன்படி, மாநிலம் முழுவதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளவை என்று 4,399 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 578 இடங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகும் என்றும் தெரியவந்திருக்கிறது. மீட்புப் பணிகளுக்காக 662 பல்துறை மண்டலக் குழுக்களும், 30,750 முதல் நிலை மீட்பாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.