JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, October 19, 2018

மாணவரின் போலிச் சான்றிதழ்: பல்கலைக்கழகமும் உடந்தையா?




டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்ற ஏபிவிபி அமைப்பின் மாணவர் தலைவர் அன்கிவ் பய்சோயாவின் கல்விச் சான்றிதழ்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டுக்கு அந்தப் பல்கலைக்கழகம் பதில் அளிக்கவில்லை. 

அத்துடன் அன்கிவ் படித்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திடமிருந்து தாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கவில்லை என்றும் நேற்று முன்தினம் (அக்டோபர் 17)கூறியுள்ளது.

சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தில் நடந்த மாணவர் சங்கத்தின் தேர்தலில் பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பாக போட்டியிட்ட அன்கிவ் பய்சோயா வெற்றி பெற்றார். அன்கிவ் டெல்லி பல்கலைக்கழகத்தில் புத்த மதத் துறையில் முதுநிலைப் பட்டப்படிப்புக்குச் சேர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் மாணவர் அமைப்பு டெல்லி பல்கலைக்கழகத்தில் புகார் ஒன்றை அளித்தது. அந்தப் புகாரில், அன்கிவ் தமிழகத்தில் வேலூரிலுள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் படித்ததாகக் கூறி அளித்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்று கூறப்பட்டிருந்தது. அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலிருந்து அவை போலி சான்றிதழ்கள் என்பதை உறுதிப்படுத்தி அளித்த கடிதமும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.



பின்னர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அன்கிவ் தனது மாணவரே அல்ல என்று தமிழக அரசிடம் அதிகாரபூர்வமாக தெரிவித்துவிட்டதாகவும் கூறியது. இது தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் புத்த மத இயல் துறையின் தலைவர் கேடிஎஸ்.சரோ டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் செய்தியாளரிடம் நேற்று கூறுகையில், இதுவரையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்குச் செவ்வாய் அன்று இரண்டாவது கடிதம் மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளோம். ஆனால், அவர்களிடமிருந்து பதில் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஆனால் இதைத் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.

இது தொடர்பாக திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வி.பெருவழுதி கூறுகையில், இதுவரை எனது மின்னஞ்சல்களைக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்களிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை. ஏன் டெல்லி பல்கலைக்கழகம் இது போன்று கூறுகிறது என்பது தெரியவில்லை எனத் தெரிவித்தார். மேலும், டெல்லி பல்கலைக்கழகம் எங்களின் தொலைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி கூட தெரியாது என்று கூறியிருக்கிறது. இவை அனைத்தும் எங்களது இணையதளத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.

இதற்கிடையே ஏபிவிபியின் சார்பாக வெற்றிபெற்ற அன்கிவ்விடம் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் என்ன படித்தீர்கள் என்று கேட்டதற்கு ஆங்கிலம் முதல் நிறைய பட்டங்களுக்குப் படித்தேன். எந்தப் பட்டப்படிப்பு என்பது சரியாக நினைவில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.



டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைகள் இந்த விவகாரத்தில் காலத்தைத் தாழ்த்துவதன் மூலம் பிரச்சினையை மறக்கடிக்க வைத்து விடலாம் என்று திட்டமிடுவதாகவே தெரிகிறது என்று காங்கிரஸ் மாணவர் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.