பிஎஸ்சி நர்சிங் படிக்க முடியாமல் வறுமையில் வாடிய மாணவிக்கு உயர்கல்வி படிக்க கலெக்டர் உதவி

திருவண்ணாமலை அருகே பிஎஸ்சி நர்சிங் படிக்க முடியாமல் வறுமையில் வாடிய மாணவிக்கு உயர்கல்வி படிக்க கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உதவி செய்தார். 



திருவண்ணாமலை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் நீலவேணி. இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தான் அரசு மேல்நிலைபள்ளியில் படித்து 976 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். 

தன்னுடைய அப்பாவும். அம்மாவும் படிக்காதவர்கள் கூலிவேலை செய்து தான் படிக்க வைத்தனர். நான் 10ம் வகுப்பு படிக்கும் போது அப்பா இறந்து விட்டார்.



தற்போது நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். பிஎஸ்சி நர்சிங் படிக்க நீங்கள் உதவி புரிய வேண்டும் என்று கோரினார். 



அப்போது மருத்துவ கல்லூரி இயக்க தேர்வுகுழுவால் நடத்தப்படும் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து அதன் பின்னர் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார். 

அதன்படி கடந்த 6ம் தேதியன்று நடைபெற்ற கலந்தாய்வில் நீலவேணிக்கு திருவண்ணாமலை தனியார் நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கலெக்டர் உடனடியாக சம்பந்தப்பட்ட கல்லூரியை தொடர்பு கொண்டு மாணவியின் குடும்ப நிலை குறித்து தெரிவித்து கட்டணமின்றி படிக்க உதவ வேண்டுகோள் விடுத்து, அதற்கான பரிந்துரை கடிதத்தையும் அளித்தார். 

அதன்படி மாணவி நீலவேணி 4 ஆண்டுகள் செலுத்த வேண்டிய கட்டணங்களிலிருந்து முழுவதுமாக விலக்கு அளித்து பிஎஸ்சி நர்சிங் பயில கல்லூரி நிர்வாகம் அனுமதி அளித்தது. 



அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாணவி நீலவேணி கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை தனது தாயாருடன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு கலெக்டர் புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
Share:

Total Pageviews

Categories