Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 28, 2019

கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு?



தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய அரசாணை முதுகலை பட்டம் பயின்ற கணினி ஆசிரியர்களிடம் வரவேற்பை பெற்ற போதிலும் 40,000கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இதுவரை 54,000 கணினி ஆசிரியர்கள் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர்.

இதில் 40000த்திற்கும் மேற்பட்டோர் இளங்களை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள். மீதமுள்ள 10000க்கும் மேற்பட்டோர் முதுகலை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள். இந்நிலையில், புதிய அரசாணையில் கணினி ஆசிரியர்களின் கல்வித்தகுதி மாற்றப்பட்டுள்ளது. மற்ற பாடங்களை கற்பிக்கும் அதே கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர்களை முதுகலை ஆசிரியர்கள் என்றும், கணினி பாடப்பிரிவில் முதுகலை படிப்புடன் பி.எட் பட்டம் பெற்றாலும் பயிற்றுனர் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் தான் கணினி அறிவியல் பாடம் நடைமுறையில் உள்ளது. என்சிஇஆர்டி விதியின் படி தனிப் பாடமாக தமிழகத்தில் கணினி பாடம் முதல் வகுப்பிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவில்லை.


புதிய பாடத்திட்டத்தில் 6 மற்றும் 9ம் வகுப்பில் மத்திய அரசின் நிதிக்காக கணினி என்ற பாடம் பெயரளவில் மட்டும் மூன்று பக்கங்களை அறிவியல் பாடத்துடன் இணைத்துள்ளது.
இதனை முறையாக செயல்படுத்தியிருந்தால் இளங்கலை படித்த அனைத்து ஆசிரியர்களும் பயன்பெறுவர்.2011ம் கல்வியாண்டில் தமிழகத்தில் கணினி அறிவியல் பாடம் 6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக கொண்டுவரப்பட்டது; அதற்காக புத்தகங்களும் பல கோடி செலவில் அச்சடிக்கப்பட்டது; ஆனால் இதுவரை மாணவர்களுக்கு வழங்காமல் குப்பைக் கழிவாக மற்றப்பட்டுள்ளது. மேலும் கணினி கல்விக்காக 2011-12ம் ஆண்டு மத்திய அரசு ரூ. 900 கோடி நிதி வழங்கிய போதிலும் கடந்த 8வருடங்களாக நிதியை பயன்படுத்தாமல் நல்ல திட்டத்தை அரசு இன்று வரை கிடப்பில் போட்டுள்ளது.


இந்நிலையில், புதிய அரசாணையால் இளங்கலை பட்டத்துடன் பி.எட் படித்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வோ, பதிவு மூப்போ எதிலும் கலந்து கொள்ள இயலாத நிலை உருவாகியுள்ளது. 2014ம் ஆண்டில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இளங்கலை பட்டத்துடன் கணினி பாடத்தில் பி.எட் பட்டம் பெற்றவர்களை பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது யுஜிசி அறிவிப்பால் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகத்தில் எம்சிஏ., எம்.எஸ்சி (ஐடி) படித்தவர்கள், எம்எஸ்சி சிஎஸ் (கம்ப்யூட்டர் சயின்ஸ்)க்கு இணையான கல்வி பெறவில்லை என்ற அறிவிப்பால் 5000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசு காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை தேர்வோ, பதிவுமூப்பின் வாயிலாகவோ நியமனம் செய்தால் மொத்தம் 54,000 ஆசிரியர்களில் 7000பேர் மட்டும் தான் கலந்துகொள்ளும் சூழல் உருவாகும். இந்த அரசாணை எண் 26 என்பது 50000 கணினி ஆசிரியர்கள் குடும்பத்தின் வாழ்வை முற்றிலும் பாதிக்கும் என்று மேற்கண்ட ஆசிரியர் சங்கம் கூறுகிறது.
புறக்கணிக்கப்படும் கணினி ஆசிரியர்கள்


மற்ற பாட ஆசிரியர்கள் போன்று அல்லாமல் டிஇஓ, ஏஇஇஓ போன்ற தேர்வு எழுதவும் கணினி ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை.
மத்திய அரசின் நிதியை முறையாக பயன்படுத்தி (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை)பள்ளிகள் தோறும் குறைந்த பட்சம் 30 கணினிகளுடன் கணினி ஆய்வகங்கள் அமைத்து, பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியர் நியமனம் செய்து கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப கல்வி முதலே நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தின் கிராமப்புற அரசுப் பள்ளி ஏழை எளிய மாணவர்களும், அரசுப்பள்ளிகளும் மேன்மையடைவார்கள் என்றும் அச்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜமுனா ராணி வெளியிட்டுள்ள செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்..
SOURCE:  http://www.theekkathir.in/2019/02/27/