Friday, February 15, 2019

பிளாஸ்டிக்கினாலான வாளி, குவளை போன்ற பொருட்கள் நீண்ட பயன்பாட்டிற்குப் பின்னர் நொறுங்கி உடைந்து போவது ஏன் ?

பிளாஸ்டிக்கில் நொறுங்கும் தன்மை (brittleness) இரண்டு காரணங்களால் உண்டாகிறது. அன்றாடம் புழக்கத்திலுள்ள வாளி, தொட்டி, குடுவை ஆகியன பாலிவினைல் குளோரைடு (PVC) என்ற பொருளால் ஆனவை. இது மிகவும் கெட்டியானது, விறைப்பானது, எளிதில் அச்சுருவாக்கம் செய்ய முடியாதது. தேவையான உருவத்தில்அச்சுவார்ப்பு (mould) செய்யும் பொருட்டு இதனுடன் மென்மையூட்டும் (plasticizer) பொருள் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு சேர்க்கப்பட்டு அச்சு வார்க்கப்பட்ட பொருட்கள் சொரசொரப்பற்று, நயமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கும். இப்பிளாஸ்டிக் பொருட்களைத் தொடர்ந்து பயன் படுத்துவதாலும்,

வெந்நீர் மற்றும் சலவைத் தூள் ஆகியவற்றின் தொடர்பினாலும், வெப்பம், சூரிய ஒளி ஆகியவற்றாலும் அவற்றிலுள்ள மென்மையூட்டியானது இழக்கப்படுகிறது. இதனால் நெகிழ்ச்சித்தன்மை அற்றுப்போய் பிளாஸ்டிக் பொருள் நொறுங்கி உடையத் துவங்குகிறது. இஃது ஒரு காரணம். மற்றொரு காரணம் என்னவெனில் புற ஊதாக் கதிர்வீச்சு (ultra violet radiation) அல்லது மிகு வேதி வினையுள்ள ஒசோன் (ozone) என்ற நீல நிற வளியின் தொடர்பு ஆகியவற்றால் பிளாஸ்டிக் பொருளில் தோன்றும் கட்டவிழ்ப் படிக மூலிகள் (free radicals) ஆகும். இவற்றாலும் பிளாஸ்டிக் பொருட்கள் நொறுங்கவும் உடைந்து போகவும் கூடும்.