வாக்குச்சாவடிக்குள் செல்பவர்களுக்கு தேர்தல் அலுவலர் அனுமதி கட்டாயம்

தேர்தல் அலுவலர் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல், 22 சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடக்கவுள்ளது.

இதையொட்டி வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்கும் விதிமுறைகள் குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ஏதேனும் வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு சந்தேகங்கள் ஏற்பட்டால் உடனடியாக மண்டல அலுவலர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். மண்டல அலுவலர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுக்களுக்கு தனித்தனியே வாகனங்கள் வழங்கப்படும். அந்த வாகனங்கள் மூலம் ஒவ்வொரு மண்டல அலுவலர்களுக்கும் ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள உட்கட்டமைப்புப் பணிகள் சரியாக உள்ளதா என உறுதிசெய்ய வேண்டும்



வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு இயந்திரங்களை கொண்டு செல்ல ஏதுவாக உரிய வழித்தடங்களை மண்டல அலுவலர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும். தேர்தல் நடைபெறும் பகுதியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நாளை மாலை 6 மணி வரை வாக்குப்பதிவிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்குள் வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு வாக்களிப்பு நேரம் முடிந்தாலும் அவர்களை வரிசைப்படுத்தி வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடி மையம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அவருடைய உதவியாளருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரால் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே வாக்குப்பதிவு மையத்திற்குள் சென்று வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட முடியும். மற்றவர்களுக்கு அனுமதி கிடையாது' என்றனர்.
Share:

Subscribe Us

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel

Categories